முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியபோதும், ஒரு டாலருக்கு ரூபாய் 77-ஆக பலவீனமடைந்தபோதும், மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டிருந்தனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.71 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நான்கே நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.27 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.2.28 காசுகளும் அதிகரித்துள்ளது.